செய்திகள்

ஓ.பி.எஸ். - எடப்பாடி இணைந்தால் மகிழ்ச்சி: நடிகர் செந்தில்

Published On 2017-04-21 07:50 GMT   |   Update On 2017-04-21 11:33 GMT
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று நடிகர் செந்தில் கூறினார்.
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடிகர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையும் சார்ந்தவன் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி நான்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ? அங்கு நான் இருப்பேன். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கூட எந்த அணிக்கும் நான் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன். தற்போது நான் நடிகர் சூர்யாவின் ‘பட்ற’ என்ற படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறேன்.

இதுவரை மொத்தம் 6 மொழிகளிலான படங்களில் நடித்துள்ளேன் என்றார்.

Similar News