செய்திகள்

அவனியாபுரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் படுகாயம்

Published On 2017-04-13 09:07 GMT   |   Update On 2017-04-13 09:07 GMT
தனியார் பயணிகள் பஸ் கவிழ்ந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

அவனியாபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் மதுரைக்கு புறப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கமுதி அருகே உள்ள பேரையூரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். காலை 10.30 மணி அளவில் மதுரை அவனியாபுரம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சை டிரைவர் முந்த முயன்றுள்ளார். இதில் பஸ் நிலைதடுமாறி ரோட்டோரத்தில் உள்ள ஈச்சனோடை கண்மாயில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்டதும் பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News