செய்திகள்

பாபநாசத்தில் கூலி தொழிலாளி குத்திக்கொலை: கொத்தனார் கைது

Published On 2017-03-15 09:54 GMT   |   Update On 2017-03-15 09:54 GMT
பாபநாசத்தில் இன்று பட்டப்பகலில் கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபநாசம்:

பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் அய்யப்பன் (வயது 32), இவர் விஷேச நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அய்யம்மாள் (31), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அதேபகுதி கீழ வழிநடப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (26), கொத்தனார். இவருக்கும், அய்யப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு அய்யப்பன் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் அருகே உள்ள பஸ்நிறுத்ததில் பஸ்சிற்காக காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த செல்வராஜ், அய்யப்பனிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யப்பனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே அய்யப்பன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை கண்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பாபநாசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பொறுப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், அன்பழகன், செந்தில், ஏட்டு மதியழகன் ஆகியோர் அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அய்யப்பனின் அண்ணன் பாஸ்கர் (42)அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் செல்வராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பாபநாசத்தில் பட்டப்பகலில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News