செய்திகள்

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: நாராயணசாமி பேச்சு

Published On 2017-02-26 11:22 GMT   |   Update On 2017-02-26 11:22 GMT
படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அத்தகையை பற்று உடையவர்கள் இருந்தால்தான் தூய்மையான அரசை நடத்த முடியும் என நாராயணசாமி பேசினார்.

ஆம்பூர்:

வாணியம்பாடியில் முத்தமிழ் மன்ற விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, 25-ம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடந்தது. ஊத்தங்கரை வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

சிறந்த தமிழ்பணிக்கான விருதை புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவுக்கும், மற்றும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளையும் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். வெள்ளிவிழா மலரை புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வே.நாராயணசாமி வெளியிட வக்கீல் அஸ்லம்பாஷா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

புதுச்சேரி மாநிலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கல்விக்கு 8 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. சிறிய மாநிலமாக இருந்தாலும் கல்விக்கு தாராளமாக செலவு செய்கிறோம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக அதிகளவில் பாடுபட்டு வருகிறோம்.

தமிழ்மொழி மீது உள்ள பற்றுக்காகவும், எங்கள் மாநில துணை சபாநாயகர் விருது பெறுவதை பார்ப்பதற்காகவும் நான் இங்கு வந்தேன். தமிழ் கலாசாரத்தையும், பண்பாடுகளையும் தமிழர்கள் மறந்து வருவதை தடுக்க வேண்டும். உலக அரங்கில் போற்றப்படும் மொழியாக தமிழை வளர்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் போது வந்த நிலைபாட்டினை போல் தமிழ்பண்பாடுகள் நிலையாக நிற்க தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும். அத்தகையை பற்று உடையவர்கள் இருந்தால்தான் தூய்மையான அரசை நடத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேராசிரியர் அப்துல்காதர், வக்கீல் வரதராஜன், தொழிலதிபர் சுரேஷ், முத்தமிழ்மன்ற தலைவர் தன்வீர்அஹமத், செயலாளர் பிரகாசம், இணை செயலாளர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் விசாகபெருமாள், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News