செய்திகள்

ஈஷா மையத்திற்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

Published On 2017-02-23 11:40 GMT   |   Update On 2017-02-23 11:40 GMT
ஈஷா மையத்திற்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
கோவை:

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை வெள்ளிங்கரி மலைச்சாரலில் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் உள்ளது. யோகா கலையை பரப்புதல், கல்வி, மருத்துவம், இயற்கை விவசாயம், கிராமிய துறைகளில் அரிய பல சேவைகளை செய்து வருகிறது. இங்கு மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது போல இந்த ஆண்டும் ஆன்மீகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில், ஈஷா மையத்திற்கு எதிராக சில இயக்கங்கள் அவதூறு பிரசாரம் செய்து சிவபக்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே ஈஷா மீது தொடர்ந்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வரும் இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி குறித்து வெறுப்புணர்வு பிரசாரம் செய்யும் கம்யூனிஸ்டு தலைவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஜோதிடர் அணி மாநில தலைவர் பிரசன்ன சுவாமிகள், மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, பொன்னுசாமி, காலனி பிரபு உள்பட பலர் உடன் சென்றனர்.

Similar News