செய்திகள்

சட்டசபையில் அமளி: சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது கல்வீசிய 2 பேர் கைது

Published On 2017-02-22 06:59 GMT   |   Update On 2017-02-22 06:59 GMT
சட்டசபையில் நடந்த அமளி காரணமாக சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது கல்வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகிறார்கள்.
அவினாசி:

தமிழக சட்டமன்ற சபாநாயகரும், திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனபால் அலுவலகம் அவினாசி- சேவூர் ரோட்டில் உள்ளது.

கடந்த 18-ந்தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது ஏற்பட்ட அமளியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

அப்போது அவரது சட்டை கிழிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அவினாசியில் உள்ள சபாநாயகர் தனபால் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சபாநாயகர் அலுவலகம் மீது கல் வீசியதாக அவினாசி பாரதிதாசன் வீதியை சேர்ந்த ஹரிதாஸ் என்ற சம்பத் (வயது 28), மணிகண்டன் என்ற மணி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திராவிடன் வசந்தன், சிவபிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News