செய்திகள்

சசிகலாவை கலாய்த்து மீம் போட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை - அ.தி.மு.க. ஐ.டி பிரிவு

Published On 2017-02-16 07:52 GMT   |   Update On 2017-02-16 07:52 GMT
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம் வெளியிட்ட 180 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி தெரிவித்துள்ளது.
சென்னை:

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று சரண் அடைவதற்கு முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதி மீது மூன்று முறை கையால் அடித்து சபதமெடுத்தார். 

சசிகலாவின் இந்த செயலைக் கிண்டல் செய்து நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் மீம்கள் அதிக அளவில் வரத்தொடங்கின. மேலும், சசிகலா சிறைக்கு சென்ற நிகழ்வையும் கலாய்த்து பல மீம்கள் இன்னமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது அ.தி.மு.க.விடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.  

இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவினர், “இதற்கு முன்னதாக ஐ.டி.பிரிவில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களை சசிகலா கட்சியிலிருந்து வெளியேற்றினார். இதன் காரணமாகவே அவர்கள் சசிகலாவிற்கு எதிராக மீம்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். மீம் தயார் செய்த சுமார் 180 நபர்களின் பெயர்கள், முகவரி ஆகியவை தயார் செய்துள்ளோம். விரைவில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், “சசிகலாவை கிண்டல் செய்து மக்கள் தான் மீம்களை உருவாக்குகின்றனர். மக்கள் சசிகலாவை எதிர்ப்பது அவர்களுக்கு ஏன் புரியவில்லை” என ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பதில் குற்றம் சாட்டியுள்ளனர்.

Similar News