செய்திகள்

ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-02-15 15:11 GMT   |   Update On 2017-02-15 15:11 GMT
ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான சந்திப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு சுமார் 8 மணியளவில் கவர்னரை சந்தித்தார். அவருடன் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்ட 10 அமைச்சர்களும் உடன் சென்றனர். கவர்னருடனான சந்திப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது ஜெயக்குமார் பேசியதாவது:-

எங்களது கருத்தை ஆளுநர் கவனமாக கேட்டுக் கொண்டார். எங்கள் கருத்தை ஆவண செய்வதாக அவர் கூறியுள்ளார். நாளைக்குள் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 124 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எங்களுகே உள்ளது. பன்னீர் செல்வத்திற்கு 8 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர் 

இவ்வாறு தெரிவித்தார்.

Similar News