செய்திகள்

சென்னை மெரினா போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்

Published On 2017-01-23 02:03 GMT   |   Update On 2017-01-23 02:27 GMT
சென்னை மெரினா போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டும் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தற்காலிக தீர்வு தங்களுக்கு வேண்டாம் என்றும் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிக்கப்படும். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களை போலீசார் பலவந்தமாக இழுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இளைஞர்கள், பெண்கள் என போராடும் அனைவரும் போலீசார் மூலம் களைக்கப்பட்டு வருவதால் காமராஜர் சாலையில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் லத்தி மூலம் போராட்டக்காரர்களை விரட்டவில்லை என்றாலும், வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றுவதால் ஒருசிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் மட்டுமல்லாமல் மதுரை அலங்காநல்லூர், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே கருத்து தான் நிலவி வருகிறது.

Similar News