செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: நாராயணசாமி தகவல்

Published On 2017-01-20 08:07 GMT   |   Update On 2017-01-20 08:07 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடிக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். அந்த கடிதத்தில் அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளேன்.

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு காலவரம்பு முடிவடைந்த போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி அவசர சட்டம் கொண்டு வந்து அதனை நீடித்தோம்.

அதேபோல் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து மத்திய அரசால் அனுமதிக்க முடியும். எனவே, இது குறித்து பிரதமர் மோடி பரிசீலனை செய்ய வேண்டும்.

புதுவை சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி கூடுகிறது. இந்த கூட்ட தொடரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். அந்த தீர்மானத்தை பிரதமர் மோடிக்கும் அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News