செய்திகள்

திருப்பூரில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் முயற்சி: 500-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2017-01-20 05:48 GMT   |   Update On 2017-01-20 05:48 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருப்பூரில் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் தி.மு.க. சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைதொடர்ந்து திருப்பூரில் இன்று தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ரெயில் நிலையம் முன்பு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், ரெயில் மறியல் செய்ய வந்த தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீஸ் தடுப்பை மீறி தி.மு.க.வினர் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து குர்தா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது. இதனால் தி.மு.க.வினர் ரெயில் மறியல் செய்ய முடியாததால் போலீசார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தினர்.

இதைதொடர்ந்து ரெயில் நிலையம் அருகில் திடீரென ரோட்டில் அமர்ந்து தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் போலீசார் , போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினரை போலீசார் கைது செய்தனர்.

Similar News