செய்திகள்
மாரியம்மாள்

நெல்லை அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-01-17 10:10 GMT   |   Update On 2017-01-17 10:10 GMT
நெல்லை அருகே தன்னுடன் வாழ மறுத்த மனைவியை வெட்டி படுகொலை செய்த கணவர் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் மகாராஜன். இவருக்கு நெல்லையை அடுத்த ராமையன்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் (வயது25) என்ற பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.

மகாராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதனால் மாரியம்மாள் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் தனது தாயார் பிச்சையம்மாளுடன் சுத்தமல்லி விசுவநாதநகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

மகாராஜன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மாரியம்மாளை நேரில் சந்தித்து பலமுறை அழைத்து வந்தார். ஆனால் அவர் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என உறுதியாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நெல்லை டவுனுக்கு மாரியம்மாள், அவருடைய தாயார் பிச்சையம்மாளுடன் சென்றார். அவர்கள் சம்பவத்தன்று வீடு திரும்பினார்கள். அப்போது மகாராஜன் மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்தார். மாரியம்மாளை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மகாராஜன் அழைத்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக மாரியம்மாளை வெட்டினார். இதில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாரியம்மாள் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜன் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் மகாராஜனின் தாய்-தந்தையை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News