திருப்பூரில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது
திருப்பூர்:
திருப்பூர் பூளுவபட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் பாண்டியன். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 26). பத்மாவதி நேற்று தனது குழந்தையை அருகில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு வாலிபர் வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வந்தபோது பின் தொடர்ந்த வாலிபர் திடீரென பத்மாவதியின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தார்.
அதிர்ச்சியடைந்த பத்மாவதி கையை உதறி தள்ளிவிட்டு சத்தம்போட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் பத்மாவதியை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பத்மாவதி நடந்தவற்றை பொதுமக்களிடம் கூறி அழுதார். பொதுமக்கள் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பெண்ணை கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் திருப்பூர் பி.என். ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் (38) பனியன் தொழிலாளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.