ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை டிசம்பர் 2-ந் தேதி ஒத்திவைப்பு
தஞ்சாவூர்:
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் தே.மு.தி.க. சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக புகார் கூறி அரசு வக்கீல் குப்புசாமி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க.வை சேர்ந்த சென்னை விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளருமான பார்த்தசாரதி, தே.மு.தி.க. பேச்சாளர் ஜெயக்குமார் ஆகியோரும் ஜெயலலிதாவை பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதாக தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இந்த 2 வழக்குகளும் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றதால் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை.
பார்த்தசாரதி சார்பில் வக்கீல்கள் மாதவன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, பார்த்தசாரதிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அவரது வக்கீல்கள், நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயக்குமார் மீது வாரண்டு உள்ளது.
இதையடுத்து இந்த 2 வழக்குகளின் விசாரணையையும் வருகிற டிசம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நக்கீரன் உத்தரவிட்டார்.