காரமடை அருகே விபத்து: காய்கறி லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
காரமடை:
காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 38). காரமடை அருகே சிக்காரன் பாளையம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (23). இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவர்களாக வேலை பார்த்தனர்.
நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சம்பத்குமாரும், பிரசாந்தும் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
காரமடை அருகே குட்டையூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளும், காய்கறி லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் சம்பத்குமாரும், பிரசாந்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான சம்பத்குமாருக்கு லட்சுமி என்ற மனைவியும், 4 மாத குழந்தையும் உள்ளனர். பிரசாந்துக்கு இன்னும் திருமணமாகவில்லை.