செய்திகள்

நாட்டுத்துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த 4 பேர் கைது

Published On 2016-10-06 02:27 GMT   |   Update On 2016-10-06 02:27 GMT
வேட்டையாட சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து வாலிபர் பலியானார். போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கெம்பகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் (வயது 25), சேட்டு (24), ஏழுமலை என்கிற சின்னவன் (23), கிருஷ்ணன் (26), சுரேஷ் (25). இவர்கள் 5 பேரும் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பயன்படுத்தி இரவு நேரங்களில் அருகே உள்ள காப்புக்காட்டிற்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 30-ந் தேதி இரவு 5 பேரும் உரிமம் இல்லாத 2 நாட்டுத்துப்பாக்கிகளுடன் காப்புக்காட்டிற்கு வனவிலங்குகளை வேட்டையாட சென்றனர். அந்த நேரம் அவர்கள் செல்லும் வழியில் பாம்பு ஒன்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டுத்துப்பாக்கி ஒன்று வெடித்து சுரேஷ் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், சேட்டு, கிருஷ்ணன், சின்னவன் ஆகியோர் சேர்ந்து சுரேசின் உடலை வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அங்கேயே எரித்து விட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சேட்டு, கிருஷ்ணன், சின்னவன், குமார் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் நடந்த அனைத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

Similar News