செய்திகள்

சேலத்தில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் ராசிபுரத்தில் மீட்பு: 2 பேர் கைது

Published On 2016-09-27 05:27 GMT   |   Update On 2016-09-27 05:27 GMT
சேலத்தில் கடத்தப்பட்ட தொழில் அதிபரை போலீசார் ராசிபுரத்தில் மீட்டனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி அருகில் உள்ளது மணியனூர். இங்குள்ள சரவணபவ நகரை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் தாஸ் (வயது 45). வட நாட்டை சேர்ந்த இவர் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ரிக் வண்டிகளையும், ரிக் வண்டிகளில் வேலை செய்ய ஆட்களையும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வந்தார்.

இதற்கு புரோக்கர்களையும் அவர் வைத்து இருந்தார். இவர்கள் மூலம் ஆட்களை வட மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பி வந்தார். இதனால் அவர் புரோக்கர்களுக்கு கமி‌ஷனும் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர குமார் தாஸ் அவரது வீட்டுக்கு அருகில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ராஜேந்திரகுமார் தாசை காரில் கடத்தி சென்றது. இதை அறிந்த ராஜேந்திரதாஸ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ராஜேந்திரகுமார் தாசின் மனைவி ரேகாதேவி இந்த கடத்தல் குறித்து சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமாரிடம் புகார் செய்தார். இதன் பேரில் அவர் தனிப்படை அமைத்தார்.

இதில் துணை கமி‌ஷனர்கள் ராமகிருஷ்ணன், ஜார்ஜ் ஜி. ஜார்ஜ் மேற்பார்வையில் சேலம் டவுன் உதவி கமி‌ஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், நெல்சன், சரவணன் மற்றும் போலீசார் இடம் பெற்று விசாரித்தனர். இந்த விசாரணையில் ராஜேந்திர குமார் தாஸ் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடத்தி சென்று மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அங்கு சென்று ராஜேந்திர குமார் தாசை மீட்டு சேலம் அழைத்து வந்தனர்.

இந்த கடத்தல் தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் (வயது 47), ராமலிங்கம் (வயது 45) ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 3பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கைதான இரண்டு பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

ராஜேந்திர குமார் தாஸ் வட மாநிலங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்தார். நாங்கள் ஆட்களை அழைத்து வந்து அவரிடம் விடுவோம். இதற்கு எங்களுக்கு அவர் கமி‌ஷன் கொடுப்பார். இதுபோல் அவர் மைசூர், பெங்களூர் உள்பட பல ஊர்களிலும் புரோக்கர்களை வைத்து இருந்தார்.

நாங்கள் ஆட்களை சேர்த்து விட்டதற்கு ரூ.2லட்சம் வரை பணம் ராஜேந்திரகுமார் தாஸ் தரவேண்டும். இந்த பணத்தை தராமல் இருந்து வந்தார். இதனால் தான் நாங்கள் சேலம் வந்து கடத்தி சென்றோம்.

பணம் கொடுத்து விட்டால் அவரை விட்டு விட கடத்தினோம். ஆனால் அதற்குள் எங்களை போலீசார் பிடித்து விட்டனர். நாங்கள் கடத்தவில்லை என்றால் மைசூர், பெங்களூரில் உள்ள ஆட்கள் ராஜேந்திரகுமார் தாசை கடத்தி சென்று இருப்பார்கள். எங்களைப்போல் பலருக்கு அவர் பணம் தரவேண்டியது உள்ளது. வட மாநில ஆட்களிடம் அவர் பணம் வாங்கி கொண்டு எங்களை போல் புரோக்கர்களுக்கு அவர் பணம் தராமல் இருந்து வந்தார். இதனால் தான் நாங்கள் கடத்தினோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தெரிகிறது.

சேலம் தொழில் அதிபர் ராஜேந்திர குமார் தாஸ் கடத்திய சில மணி நேரத்தில் அவர் மீட்கப்பட்டார். இதையடுத்து தனிப்படை போலீசாரை சேலம் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் பாராட்டினார்.

Similar News