செய்திகள்

ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் டோனி

Published On 2019-01-16 10:30 GMT   |   Update On 2019-01-16 10:30 GMT
அடிலெய்டு போட்டியில் 54 பந்தில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் எம்எஸ் டோனி #MSDhoni
இரண்டு உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஒய்வு பெற்ற டோனி ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டில் அவரது ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. இதனால் டோனி விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை அணியில் அவரது இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த ஆண்டை அவர் அமர்க்களமாக தொடங்கினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டோனி அரை சதம் அடித்தார். ஆனால் அவரது ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 96 பந்தில் 51 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் அவரது மீதான விமர்சனம் மேலும் அதிகமானது.

இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து பதிலடி கொடுத்தார். 37 வயதான அவர் 54 பந்தில் 2 சிக்சருடன் 55 ரன்னை எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவரது 69-வது அரை சதம் ஆகும். கோலி ஆட்டம் இழந்த பிறகு பொறுப்புடன் களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். 44.1 வது ஓவரில் லயன் வீசிய பந்தில் சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். தன்னை விமர்சித்தவர்களுக்கு டோனி பேட்டால் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

டோனியின் ஆட்டத்தை கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் டோனியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரது தனித்துவத்தை காட்டிவிட்டார். விளையாடும்போது டோனி என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது அவருக்கு மட்டுமே தெரியும். அவரும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடினார்கள். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தநாள் மிகவும் சிறப்பானது.

ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை இறுதி நேரத்தில் கட்டுப்படுத்த முயன்றோம். மேக்ஸ்வெல், மார்ஷ் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தது முக்கிய திருப்பம். அவர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால் 330 ரன் என்ற கடின இலக்கை எடுக்க வேண்டிய நிலை இருந்திருக்கும்.

இவ்வாறு கோலி கூறினார்.
Tags:    

Similar News