செய்திகள்

டெல்லி டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 410 ரன்கள் இலக்கு

Published On 2017-12-05 10:16 GMT   |   Update On 2017-12-05 10:16 GMT
டெல்லி கடைசி டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 246 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 410 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 243 ரன்களும், முரளி விஜய் 155 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. சண்டிமல் 147 ரன்னுடனும், சண்டகன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.


2-வது இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த முரளி விஜய்

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் 111 ரன்களும், சண்டிமல் 164 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்சில் 163 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ரன்னுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.



இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து  இந்தியா 409 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News