செய்திகள்

நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்டில் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசிய ஆரோன் பிஞ்ச்

Published On 2017-08-15 14:58 GMT   |   Update On 2017-08-15 14:58 GMT
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சுர்ரே அணி, சசக்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சுர்ரே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், ஆரோன் பிஞ்சும் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ராய் 33 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். பிஞ்ச் 64 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் சுர்ரே அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.

பிஞ்ச் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 18-வது ஓவரை வீஸ் வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த பிஞ்ச், அடுத்த நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சசக்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் சுர்ரே அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News