செய்திகள்

பெங்காலை வீழ்த்தி விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு

Published On 2017-03-20 12:19 GMT   |   Update On 2017-03-20 12:19 GMT
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது.
விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் காந்தி (15), கங்கா ஸ்ரீதர் ராஜூ (4), பாபா அபராஜித் (5), விஜய் சங்கர் (2) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 49 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

ஆனால் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 112 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டாக தமிழ்நாடு 47.2 ஓவரில் 217 ரன்கள் சேர்த்து அல்அவுட் ஆனது.

பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. ஜார்கண்ட் அணிக்கெதிராக அரையிறுதியில் சதம் அடித்த தொடக்க வீரர்கள் கோஸ்வாமி (23), ஈஸ்வரன் (1) இன்று அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் திவாரி (32), சட்டர்ஜீ (58), மஜூம்தார் (24), கானி (24) சீரான இடைவெளியில் அவுட்டாக பெங்கால் அணி 45.5 ஓவரில் 180 ரன்களில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றியது. தமிழ்நாடு அணி சார்பில் அஸ்வின் கிறிஸ்ட், மொகமது மற்றும் ஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

சதம் அடித்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Similar News