செய்திகள்
மம்தா பானர்ஜி, பிரமோத் சவந்த், ராகுல் காந்தி

அரசியல் சுற்றுலாவை வரவேற்கிறேன்: மம்தா, ராகுல் வருகை குறித்து கோவா முதல்வர் விமர்சனம்

Published On 2021-10-31 14:07 GMT   |   Update On 2021-10-31 14:07 GMT
கோவா சட்டசபை தேர்தலில் எப்படியாவது அதிக இடங்களை பிடித்துவிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ்- பா.ஜனதா கட்சிகள் நேருக்குநேர் மோதிய மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜனதாவை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கிறது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றார். பா.ஜனதாவுக்கு எதிராக கடுமையான வகையில் போராடி வருகிறார். பா.ஜனதாவை எதிர்க்கும் ஒரே தேசிய தலைவர் மம்தா என்ற பிம்பம் உருவாகி வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மம்தா பானர்ஜி கோவா, மிசோரம் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். 

குறிப்பாக கோவா மாநிலத்தில் பா.ஜனதா கடும் நெருக்கடி கொடுத்து ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் தேர்தல் வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர் உதவியுடன் கோவாவில் கால் பதித்துள்ளார். ஒன்றிரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் கோவா சென்று பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் காந்தியின் கோவா பயணத்தை, அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் , அரசியல் சுற்றுலா என விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பிரமோத் சாவந்த் கூறுகையில் ‘‘இது அரசியல் சுற்றுலா. அடுத்த நான்கு மாதங்கள், கொரோனா தொற்றால் பாதிப்படைந்த டாக்சி, ஓட்டல் தொழில்கள் இதுபோன்ற சுற்றுலா மூலம் முன்னேற்றம் அடையும்’’ என்றார்.

மேலும், ராகுல் காந்தியின் டூ வீலர் டாக்ஸி பயணம் குறித்து கூறும்போது ‘‘ராகுல் காந்தி  இரு சக்கர டாக்ஸியில் பயணித்தார். அவருக்கு இது முதல்முறையாக இருக்க வேண்டும். நாங்கள் டூ வீலர் டாக்ஸிகளிலும், ரிக்‌ஷாக்களிலும் பயணித்து வருகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News