செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கிய அரசு பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் புறநகர் பகுதியான பூஞ்சாரில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்கிய நிலையில், பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
மாநிலத்தின் மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சரின் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.