செய்திகள்
மணக்கோலத்தில் சதீஷ் மற்றும் சுருதி

திருமணம் முடிந்ததும் மணமகன் செய்த காரியம்... இன்ப அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்

Published On 2021-07-17 02:01 GMT   |   Update On 2021-07-17 02:01 GMT
வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதமும் இருந்தார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தது. படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில், இளம் பெண்களின் இல்லற கனவுகள் பாதியிலேயே பொய்த்து போகும் சம்பவம் தொடர்ந்து நடந்ததால், அங்கு வரதட்சணை விவகாரம் புயலை கிளப்பியது.

வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதமும் இருந்தார். இந்த நிலையில், வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்பு திருமணத்தை நடத்தி காட்டினார்.

ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28), நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போது தனக்கு வரதட்சணை வேண்டாம் என சதீஷ் கூறி இருந்தார்.



இந்தநிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நடைபெற இருந்த திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது. 2 மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு வந்தார். அப்போது மணமகன் சதீசும் அங்கு வந்தார்.

அவர் மணமகள் அணிந்திருந்த நகைகளை கண்டார். பின்னர் தனது கொள்கையே வரதட்சணை வாங்க கூடாது என்பது தான் என மணமகளிடம் தெரிவித்தார். மேலும், விருப்பம் எனில் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணமகன் சதீசின் செயலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளத்திலும் இவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Tags:    

Similar News