செய்திகள்
திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் வந்த வினை- இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை
திருமணம் செய்யாமல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஜோடிக்கு, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மார்ட்டின் ஜோசப் (வயது 26). இவருக்கும், 27 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கலாம் என முடிவெடுத்தனர்.
அதன்படி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர். அங்கு உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஜோடிக்கு, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு வருட வாழ்க்கை கசந்து போனது.
இதனை தொடர்ந்து அந்த பெண், மார்ட்டின் ஜோசப்பிடம் இருந்து விலகி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பிறகு அந்த வாலிபரின் கொடூர புத்தி, அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது.
மீண்டும் என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வராவிட்டால், நீ நிர்வாணமாக இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண் மீண்டும் மார்ட்டின் ஜோசப்புடன் ஒரே வீட்டில் வசித்தார். அப்போது வித்தியாசமான முறையில் அவரை சித்ரவதை செய்ய தொடங்கினார், ஜோசப்.
தன்னுடைய சிறுநீரை குடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததோடு, உடல் முழுவதும் அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது. 22 நாட்கள் கண்மூடித்தனமாக செய்த சித்ரவதையால், அந்த பெண் அங்கிருந்து வெளியேறி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அப்போது அவரை மார்ட்டின் ஜோசப் தடுத்து விட்டார்.
அதன்பிறகும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் சென்றது. இதனால் நேற்றுமுன்தினம் கொச்சி போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை அறிந்த மார்ட்டின் ஜோசப் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதுதொடர்பாக கொச்சி போலீசார் கூறுகையில், எர்ணாகுளத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது மார்ட்டின் ஜோசப்புடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மார்ட்டின் ஜோசப் ரூ.50 ஆயிரம் வாடகையில் உள்ள வீட்டில் ஆடம்பரமாக வசித்து வந்துள்ளார். அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மார்ட்டின் தலைமறைவாக இருப்பதற்கு உதவியதாக அவருடைய நண்பர்கள் 3 பேரை பிடித்துள்ளோம் என்றனர்.
இளம்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்து வாலிபர் சித்ரவதை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.