செய்திகள்
மேற்கு வங்காளத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன.
கொல்கத்தா:
மேற்கு வங்காள தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், பா.ஜ.க. அலுவலகங்கள், தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர், வீடுகள் மீது தாக்குதல் அதிக அளவில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஹிடீர்ப்பூர் பகுதியில் பா.ஜ.க. கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தலவல் கிடைத்தது.
உடனடியாக, பா.ஜ.க. அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். நாட்டு வெடிகுண்டுகளை பா.ஜ.க. அலுவலகம் அருகே வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.