செய்திகள்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக விலக்கு அளித்தது டெல்லி கோர்ட்
தமிழக சட்டசபை தேர்தல் பணியில் மும்முரமாக இருப்பதால் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க ப சிதம்பரம் கேட்டுக்கொண்ட நிலையில், கோர்ட் விலக்கு அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஊழல் செய்ததாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந்தேதி மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதன்பின் அக்டோபர் 16-ந்தேதி பண மோசடி வழக்கில் கைது செய்தது.
அக்டோபர் 22-ந்தேதி சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. டிசம்பர் 4-ந்தேதி அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்றார்.
அமலாக்கத்துறையால் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில், நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தெரிவித்தனர். அதில் ‘‘தமிழக தேர்தல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களது வக்கீல் இருவரும் நட்சத்திர தேர்தல் பிரசார தலைவர்கள் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, வழக்கை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.