செய்திகள்
தற்கொலை

பெங்களூரு அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-03-21 05:05 GMT   |   Update On 2021-03-21 05:05 GMT
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால், எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே நடந்து உள்ளது.
பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவர் தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்த பின்னர் சினேகா தனது தோழிகளுடன் செல்போனில் அதிக நேரம் பேசி கொண்டே இருந்ததாகவும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சினேகா கடந்த 3-ந் தேதி வீட்டில் வைத்து எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தொட்டபள்ளாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சினேகா இறந்து விட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சினேகாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் எலி மருந்தை தின்று சினேகா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News