கேரளாவில் இன்று அதிகாலை 60 வயதான யானை மாரடைப்பால் இறந்த தகவல் வன ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மங்கலம்குன்னு கர்ணன் யானை, உயரமான யானை என்ற பெயர் பெற்றது. இந்த யானைக்கு 60 வயதாகிறது.
இந்த யானை உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியில் இருந்து கடந்த 1991-ம் ஆண்டு கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானை கேரளாவில் நடத்தப்படும் தலப்பூக்கம் உள்பட பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது.
தில்சே, கத நாயகன், நரசிம்மம் உள்பட பல மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளது. டி.வி. சீரியலிலும் நடித்துள்ளது.
இந்த யானைக்கு இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யானையை பரிசோதித்த போது அது இறந்திருந்தது. மாரடைப்பால் யானை இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் வன ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.