செய்திகள்
குடியரசு தின விழா: டெல்லி ராஜபாதையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த பார்வையாளர்கள்
டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவை காணவந்துள்ள பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்துள்ளனர்.
இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் நடக்கிறது. ஒன்று, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல். மற்றொன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற தொடர் போராட்டமும், டிராக்டர் பேரணியும்.
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வருகிறார்.
அதைத்தொடர்ந்து ராஜபாதைக்கு வருகை தருகிற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துகிறார்.
குடியரசு தின விழாவை காண்பதற்கு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.