செய்திகள்
பூட்டான் செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்புகிறது இந்தியா -மோடி அறிவிப்பு
செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடர்பாக பூட்டானின் நான்கு விண்வெளி பொறியாளர்கள் இஸ்ரோவுக்குச் செல்ல உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
புதுடெல்லி:
பூட்டான் நாட்டில் இரண்டாம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடியும், பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங்கும் இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியா தனது விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்காகத் திறந்திருக்கிறது. இது புதுமை, திறன் மற்றும் திறமைகளை அதிகரிக்கும். பூட்டானின் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா உதவி செய்கிறது. இஸ்ரோ அடுத்த ஆண்டு பூட்டானின் செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
இந்த நோக்கத்திற்காக, பூட்டானின் நான்கு விண்வெளி பொறியாளர்கள் டிசம்பரில் இஸ்ரோவுக்குச் சென்று பயிற்சி பெறுவார்கள். இந்த நான்கு இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.