செய்திகள்
ரியாவிடம் சம்மன் வழங்கிவிட்டு திரும்பிய அதிகாரிகள்

சுஷாந்த் சிங் மரண வழக்கு- காதலி ரியாவின் வீட்டுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கிய என்சிபி அதிகாரிகள்

Published On 2020-09-06 03:35 GMT   |   Update On 2020-09-06 03:35 GMT
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப் போருள் தொடர்பு கோணத்தில் விசாரித்து வரும் நிலையில், சுஷாந்தின் காதலி ரியாவை விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.
மும்பை:

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

விசாரணைக்கு பிறகு ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்கரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அதன்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் அடுத்த திருப்பமாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொண்ட குழு மற்றும் போலீசார் இன்று காலை ரியாவின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு இருந்த ரியாவிடம், விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி சம்மன் அளித்துவிட்டு திரும்பினர். ரியாவிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News