செய்திகள் (Tamil News)
அசோக் கெலாட்டிற்கு செக் வைக்க துடிக்கும் மாயாவதி: எம்.எல்.ஏ.-க்கள் இணைப்பை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு
பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.-க்களை அசோக் கெலாட் காங்கிரசுடன் இணைத்ததை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி முறையீட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப் சந்த் கெரியா, லகான் மீனா, ஜோகேந்த்ர அவானா, ராஜேந்திர குத்தா ஆகியோர் 6 பேர் வெற்றி பெற்றனர்.
ஆனால் 2019-ல் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மாயாவதி இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்ததை எதிர்த்து ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இணைப்பை எதிர்த்து சபாநாயகர் அலுவலத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஏற்கனவே பாஜனதா எம்எல்ஏ மதன் தில்வார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் சபாநாயகர் கடந்த 24-ந்தேதி தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 பேரை இணைத்ததன் மூலம் 200 பேர் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.