செய்திகள்
கைதிகளுக்கான அறைகள் தட்டுப்பாடு - புதிதாக 8 சிறைச்சாலைகள் கட்ட உ.பி அரசு முடிவு
உத்தர பிரதேசத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் சிறைகளுக்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவுவதால் புதிதாக 8 சிறைச்சாலைகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ:
நாட்டிலேயே அதிக குற்றங்கள் நிகழும் மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. நாள்தோறும் அம்மாநிலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கொடூர குற்றங்கள் அரங்கேறிவருகிறது.
இந்த கொடூர குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடைக்க அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சிறைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறைத்துறையின் பொது இயக்குனர் ஆனந்த் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உத்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள சிறைகளில் 60 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்க மட்டுமே வசதி உள்ளது.
ஆனால் அந்த சிறைகளில் தற்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைகளில் கடுமையான அறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த அறைகள் தட்டுப்பாட்டை குறைக்க 15 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்கும் கொள்ளளவுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக 8 சிறைச்சாலைகள் கூடிய விரைவில் கட்டப்படும்’’ என அவர் தெரிவித்தார்.