செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை விதித்த நீதிபதி இடமாற்றம்

Published On 2020-01-23 10:13 GMT   |   Update On 2020-01-23 10:13 GMT
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.
 
குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு மரண வாரண்டு பிறப்பித்தது. அங்கு நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அரோரா இந்த தீர்ப்பை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என டெல்லி நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News