செய்திகள்
ஜென்னி மேட் ஜோன்சன்(71) (இடது பக்கம்)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய நார்வே நாட்டு சுற்றுலாப் பயணி வெளியேற்றம்

Published On 2019-12-27 11:54 GMT   |   Update On 2019-12-27 13:57 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக 71 வயது நார்வே நாட்டுப் பெண்ணை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருவனந்தபுரம்:

நார்வே நாட்டை சேர்ந்த ஜென்னி மேட் ஜோன்சன்(71) என்ற பெண் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜென்னி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த 23-ம் தேதி கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தனது கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர், போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

கொச்சியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜென்னியிடம் விசாரணை நடத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர் விசா விதிகளை மீறியதை உறுதி செய்தனர். 

இதையடுத்து ,ஜென்னி உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்றால் சட்டரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தனர்.  

இந்நிலையில், தனது நண்பர் மூலமாக விமான டிக்கெட் ஏற்பாடு செய்துள்ளதாகவும், விரைவில் சொந்த நாடான நார்வேவுக்கு திரும்பி  செல்ல இருப்பதாகவும் ஜென்னி தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்துவந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜேக்கப் லின் டென்தல்  மாணவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News