செய்திகள்
உ.பி.யில் அரசு பேருந்து மீது லாரி மோதல்- 9 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
பண்டா:
உத்தர பிரதேச மாநிலம் திண்ட்வாரி காவல் சரகத்திற்குட்பட்ட சாய்மிரி வளைவு அருகே, இன்று மதியம் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட எஸ்பி கணேஷ் பிரசாத் கூறுகையில், பண்டாவில் இருந்து பதேபூர் நோக்கி சென்ற பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர். சாய்மிரி வளைவு அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது’ என்றார்.