செய்திகள்
பெண் கைது

கணவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி

Published On 2019-08-23 05:23 GMT   |   Update On 2019-08-23 05:23 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அவரை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் கடம்(36). மும்பை அந்தேரியில் பணியில் இருந்தபோது பிரனாலி(33) என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுனிலுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பிரனாலிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் இந்த சண்டை வலுக்கவே, மிகுந்த ஆத்திரமடைந்த பிரனாலி சுனிலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஒரு நாள், சுனில் படுக்கை அறைக்கு சென்றதும், பிரனாலி சமையல் அறைக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு அங்கிருந்து கத்தியை எடுத்து வந்துள்ளார்.

பின்னர் தன் கையில் இருந்த கத்தியை வைத்து சுனிலின் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சுனில் உயிரிழந்தார். பின்னர் சுனிலின் பெற்றோரிடம் கத்தியால் அவர் தன்னைத்தானே குடித்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என கூறியுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுனிலின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், 11 முறை உடலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது.

தானாகவே ஒருவர் இப்படி செய்திருக்க சாத்தியமில்லை என சந்தேகித்த போலீசார், பிரனாலியிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த பிரனாலி, தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் பிரனாலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News