செய்திகள்

அரியானாவில் நீதிபதி மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்- மகன் கவலைக்கிடம்

Published On 2018-10-14 07:01 GMT   |   Update On 2018-10-14 07:01 GMT
அரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களின் பாதுகாவலர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மனைவி உயிரிழந்தார். #GurgaonJudge #JudgeWifeShotDead
குருகிராமம்:

அரியானா மாநிலம் குருகிராமம் மாவட்ட கூடுதல் நீதிபதி கிருஷன் காந்த் ஷர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் ஆகியோர் நேற்று மாலை மார்க்கெட்டுக்கு சென்றனர். நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியான மகிபால் சிங் என்பவரும் பாதுகாப்பிற்காக உடன் சென்றார்.

பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, திடீரென பாதுகாப்பு அதிகாரி மகிபால் சிங் தனது துப்பாக்கியால், நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது கண்மூடித்தனமாக சுட்டார். அவர்கள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், அவர்களை காருக்குள் தூக்கி போட முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. எனவே, அதே காரில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பாதுகாவலர், நீதிபதிக்கே போன் செய்து துப்பாக்கியால் சுட்டதை கூறியிருக்கிறார்.


இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய்- மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரீத்து இன்று காலை உயிரிழந்தார். துருவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நீதிபதி வீட்டில் பாதுகாவலராக பணியாற்றிய அவர், நீதிபதி வீட்டில் உள்ளவர்கள் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதால் துப்பாக்கியால் சுட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். #GurgaonJudge #JudgeWifeShotDead
Tags:    

Similar News