செய்திகள்
கர்நாடக தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை - உச்சநீதிமன்றம்
கர்நாடக மாநிலத்தில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை காலை 10:30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்திக்க அவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பதிவாளரை சந்திக்க அனுமதி கிடைத்தது. பதிவாளிடம் மனுவை அளித்து, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ், மஜத சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker