செய்திகள்
ஜெய்ப்பூரில் காளை மாடு தாக்கி அர்ஜெண்டினா பயணி பரிதாபமாக உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் அர்ஜெண்டினா சுற்றுலா பயணி ஒருவர் காளை மாடு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரிலுள்ள மார்கெட்களில் விதவிதமான தரமான துணிவகைகள் குறைந்த விலையில் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் அர்ஜெண்டினாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 29 வயது சுற்றுலா பயணி ஜெய்ப்பூர் நகருக்கு சென்றுள்ளார். நேற்று அவர் அங்குள்ள மனக் சவுக் பகுதியில் உள்ள மார்கெட் வழியே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு காளை மாடு அவரை தாக்கியது. இதில் அவரது கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் பலமான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரது மரணம் குறித்து அர்ஜெண்டினா தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.