செய்திகள்
பீகார்: பணிமனையில் நின்ற அமர்பள்ளி விரைவு ரெயிலில் திடீர் தீ விபத்து
பீகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்ப்ட்டிருந்த அமர்பள்ளி விரைவு ரெயிலில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்னா:
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசுக்கும், பீகார் மாநிலத்தின் கதிஹார் நகருக்கும் இடையே செல்லும் ரெயில் அமர்பள்ளி விரைவு ரெயில். இந்த ரெயில் இன்று மாலை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது விரைவு ரெயிலின் கடைசி இரண்டு பெட்டிகளில் திடீரென தீ பிடித்தது. அந்த பகுதி வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பணிமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கடைசி பெட்டிகளில் பிடித்த தீ மற்ற பெட்டிகளில் பரவாமல் இருக்க ஊழியர்கள் அந்த பெட்டிகளை தனியாக அகற்றினர். இதுகுறித்து தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து ரெயில் பெட்டியில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.