செய்திகள்

அரியானா சாமியார் வளர்ப்பு மகளின் நீதிமன்ற காவல் நவம்பர்-6 வரை நீட்டிப்பு

Published On 2017-10-23 13:32 GMT   |   Update On 2017-10-23 13:32 GMT
கற்பழிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகளின் நீதிமன்ற காவல் நவம்பர் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
சண்டிகர்:

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

இந்த கலவரம் தொடர்பாக அரியானா மாநில போலீசார் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இவர்களில் முதலிடத்தில் இருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் இன்சான் தலைமறைவானார்.



இதற்கிடையில், பஞ்சாப் மாநிலம், ஜிராக்பூர்-பாட்டியாலா சாலையில் ஹனி பிரீத்தை அரியானா மாநில போலீசார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். அவருடன் சுக்தீப் கவுர் என்ற பெண்ணும் கைதானார். பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆறுநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், அவரது காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

பத்துநாள் காவல் முடிவடைந்ததையடுத்து, கடந்த 13-ம் தேதி பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஹனி பிரீத் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 23-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த பத்துநாள் காவலும் முடிவடைந்த நிலையில், இன்று ஹனி ப்ரீத்தும் அவருடன் கைதான சுக்தீப் கவுரும் இன்று அம்பாலா சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் வழியாக பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி ரோஹித் வாட்ஸ் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News