செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டி: புகழேந்தி தகவல்

Published On 2017-10-13 04:56 GMT   |   Update On 2017-10-13 04:56 GMT
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுவார் என கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்துவோம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஜோதி தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே தினகரன் போட்டியிட்டார்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அவர் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் காரணமாக ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தினகரன் போட்டியிடுவார் என்று கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறினார்.

இதுகுறித்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார். பின்னர் அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அவர் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவார்.

தேர்தல் கமி‌ஷன் விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் தினகரனுக்கே கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News