செய்திகள்

நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் கற்பழிப்பு - தடுக்க முயன்ற உறவினர் சுட்டுக்கொலை

Published On 2017-05-25 22:49 GMT   |   Update On 2017-05-25 22:49 GMT
நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்களை கொள்ளையர்கள் கற்பழிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற உறவினர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நொய்டா:

உத்தரபிரதேச மாநிலம் நாகர் மாவட்டத்தில் உள்ள ஜெவர் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புலன்சாதர் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தங்களது உறவினரை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டனர். காரில் 4 பெண்கள் உள்பட 7 பேர் இருந்தனர். இந்த கார் நொய்டாவின் சபூட்டா கிராமத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென சாலையில் தறிக்கெட்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அப்போது முன்பக்க டயர்கள் இரண்டும் ‘பஞ்சர்’ ஆகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது சகோதரருக்கு போன் செய்து உதவிக்கு அழைத்தார்.

இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்து அவர்களை சுற்றிவளைத்தது. பின்னர் அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, செல்போன்கள் மற்றும் பணப்பை உள்ளிட்டவற்றை பறித்தனர்.

அவர்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்த 4 பெண்களையும் மறைவான பகுதிக்கு இழுத்துச்சென்று கற்பழித்தனர். இதனை தடுக்க முயன்ற அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட 4 பெண்களையும் மீட்டு மருத்துவபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர். 
Tags:    

Similar News