செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள்

Published On 2017-04-09 20:13 GMT   |   Update On 2017-04-09 20:13 GMT
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த நிலையில் பல்வேறு ஆலோசணைகள் நடத்தப்பட்ட பின் தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான அறிவிப்பை இணையத்தளம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் வருமான வரி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. முறைகேடுகளை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் நூதன முறையில் மீறப்பட்டுள்ளன. 



அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 21இல் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.    

ஏப்ரல் 7-ந்தேதி வரை ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன், வெள்ளித் தட்டு, புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 



டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பின் தேர்தல் ரத்து செய்யப்படும் முடிவு எட்டப்பட்டுள்ளது. 

நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News