செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு: விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

Published On 2017-03-25 17:25 GMT   |   Update On 2017-03-25 17:25 GMT
அரவிந்த் கெஜ்ரிவால் மீது மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக கெஜ்ரிவால் மீதும் அசுத்தோஷ், குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேர் மீதும் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி சுமித் தாஸ் விசாரணை நடத்தினார்.

முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த அருண் ஜெட்லி கோர்ட்டில் ஆஜராகாததற்கு ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கு இடையே அங்கு வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் கோர்ட்டு அறையில் குழப்பம் நிலவியது.

இதைத்தொடர்ந்து நீதிபதி தலையிட்டு, வழக்கில் தொடர்பில்லாதவர்களை கோர்ட்டு அறையில் இருந்து வெளியேற்றினார். பின் இந்த வழக்கு விசாரணை மே 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Similar News