செய்திகள்

மராட்டியம்: பயிற்சி டாக்டர்கள் ஸ்ட்ரைக் வாபஸ் - நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின் பணிக்கு திரும்பினர்

Published On 2017-03-25 07:47 GMT   |   Update On 2017-03-25 07:58 GMT
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் உயர் நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீதான, நோயாளிகளின் உறவினர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டித்து சுமார் 3000 பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஐந்து நாளாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திவந்தனர். அத்தியாவசிய சிகிச்சைகளை மூத்த மருத்துவர்கள் மேற்கொண்டாலும், பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் ஏராளமான நோயாளிகள் போதிய மருத்துவ சிகிச்சையின்றி தவித்து வந்தனர்.



பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றம், பயிற்சிமருத்துவர்களின் போராட்டத்தால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும், அவர்களின் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அம்மாநில அரசு உறுதியளித்தது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற எச்சரிக்கை மற்றும் மாநில அரசின் வாக்குறுதியை தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தங்களது ஐந்து நாள் போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர்.

Similar News