செய்திகள்

அரசு கார்களில் ‘சைரன்’ சப்தம் கூடாது - உ.பி முதல்வர் யோகி அடுத்த அதிரடி

Published On 2017-03-22 19:59 GMT   |   Update On 2017-03-22 19:59 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு வாகனங்களில் ‘சைரன்’ ஒலி இனி இருக்ககூடாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு வாகனங்களில் ‘சைரன்’ ஒலி இனி இருக்ககூடாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகள் உள்பட 46 மந்திரிகளும் பதவியேற்றனர்.

முதல் மந்திரியாக பதவியேற்றதுமே யோகி ஆதித்யநாத் தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார். ஊழல் இல்லாத வெளிப்படையான அரசை நடத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் அவர் அனைத்து மந்திரிகளும் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவில் கூறியிருக்கிறார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அதிரடியாக அதிகாரிகளும் 15 நாட்களில் தங்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்களில் ‘சைரன்’ ஒலி இனி ஒலிக்கக்கூடாது என சக மந்திரிகளிடம் அவர் தெரிவித்ததாக அம்மாநில மந்திரி சித்தார்தநாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியிருந்தாலும் ‘சைரன்’ ஒலி எழுப்பாதவகையில் அது இருக்க வேண்டும் என யோகி தெரிவித்திருக்கிறார். ஒலி மாசுபாடு மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதால் இத்தகைய முடிவை யோகி எடுத்துள்ளதாக சித்தார்தநாத் சிங் கூறினார்.

மேலும், முந்தைய சமாஜ்வாடி ஆட்சியில் சிவப்பு சுழல் விளக்கு தாறுமாறாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும், தற்போது அதை முறைப்படுத்தப்படுவதாகவும் மந்திரி தெரிவித்துள்ளார். 

Similar News