செய்திகள்

நாகலாந்து முதல்வர் டி.ஆர் ஷெலியாங் பதவி விலக முடிவு

Published On 2017-02-19 16:31 GMT   |   Update On 2017-02-19 16:31 GMT
வன்முறை எதிரொலி மற்றும் உள்கட்சி எதிர்ப்பு காரணமாக நாகலாந்து முதலமைச்சர் டி.ஆர் ஷெலியாங் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஹிமா:

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணிக்கு பா.ஜனதாவின் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. முதல்–மந்திரியாக டி.ஆர்.ஜெலியாங் பதவி வகித்து வருகிறார்.

முதல்–மந்திரி ஜெலியாங் பதவி விலக கோரியும், நாகாலாந்து பழங்குடியினர் நடவடிக்கை குழு கடந்த 30–ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் அசாதரண சூழல் நிலவி வருகிறது. மேலும், ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 48 பேர் முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இந்நிலையில், வன்முறை எதிரொலி மற்றும் உள்கட்சி எதிர்ப்பு காரணமாக முதலமைச்சர் டி.ஆர் ஷெலியாங் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து நாகலாந்து மக்கள் முன்னணியின் அவசர கூட்டம் நாளை நடக்க உள்ளது. அதில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற மாநில அரசின் முடிவுக்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாகாலந்து மாநிலமே ஸ்தம்பித்தது.

தொடர் போராட்டம் காரணமாக தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News